Tuesday 31 January 2012

மீலாது விழா கொண்டாடலாமா?



Thu
18
FEB
2010
 

மீலாது விழா கொண்டாடலாமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
மீலாது விழா கொண்டாடலாமா?

فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.
மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.
எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் – முஸ்லிம்)
நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.
மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும்பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)
எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.
எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

கத்துசான் சாலிபு வபாத் ஆனார்.

சட்டி சயித் மற்றும் சபர்   ஜெராக்ஸ் தாகிர்,  தய்பு ஆகிய்ரின் தந்தையும் கத்தி குலாம் மாமனாருமான   கத்துசான் சாலிபு வபாத் ஆனார். அன்னாரின் ஜனாஸா நேற்று திருச்சி பாலக்கரையில் நல்லடக்கம் செய்யபட்டட்து.

Monday 23 January 2012

ஊமச்சி சாலியால் பீவி 19.1.12 அன்று வபாத்!

மல்லி எனும் இப்ராகிம் அலி மனைவியும் ஆதம் அவர்களின் சகோதரியுமான ஊமச்சி சாலியால் பீவி 19.1.12 அன்று வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாசா மறுநாள் காலை சென்னை ராயப்பேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப் பட்டது.    

ஊசாடி ரமிஷா வபாத் !


ஊசாடி ரமிஷா வபாத் !




சைக்கிள் கடை சண்டி சாகுல் மனைவியும் , ஊசாடி கருப்பன் கனியின் தாயாருமான ரமிஷா பீவி நேற்று புதூரில் வபாத் ஆனார். அன்னாரின் ஜனாசா இன்று 24.1.12 காலை புதூரில் நல்லடக்கம் செய்யப் பட்டது!        

Saturday 21 January 2012

வாத்தியார் கரீம் மகன் முஸ்தபா வபாத் ஆனார்!




வாத்தியார் கரீம் மகன் முஸ்தபா நேற்று 20.1.12 இரவு உடலில் சர்க்கரை அளவு குறைந்து போனதால் வபாத் ஆனார்! அவரின் ஜனாசா இன்று சென்னை ராயப்பேட்டை கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப் பட்டது.    

Tuesday 17 January 2012

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?




மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.
அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?
அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம்என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை. திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?
இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.
இவர்களின் கருத்துப்படி ஸஃபர் மாதம் ஒரு பீடை மாதம்என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.
பீடை நாட்கள் என்றோ, மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸஃபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், புயல், வெள்ளம், அதிகமான மழை போன்றவற்றால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸஃபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.
ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது. ஒருபக்கம் ஸஃபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸஃபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.
ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸஃபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)
அடுத்ததாக ஸஃபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.
இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் சினிமா தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமர்சியாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)
அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)
பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸஃபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.
அன்புள்ள சகோதர-சகோதரிகளே இது ஒரு தீர்க்கமான ‘பித்அத்’ என்பதை விளங்கி நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையிலிருந்து தவிர்ந்து கொள்ள கீழ்கண்ட நபிமொழியே போதுமானது.
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத், ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மற்றும் நஸாயீ.
மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றியே இந்த ‘பித்அத்’தான செயல்கள் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றது. மாற்று மத நம்பிக்கைபடி ஆடி மாதம் பீடை மாதம் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை பீடை என்றும் புதுமண தம்பதிகளை பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.
பொழுது போக்கிற்காக ஏதோ ஒரு சின்ன விழா-பண்டிகை என்ற பெயரில் ஆண்களும், பெண்களுமாக வீட்டைவிட்டு வெளியேறி மேற்சொன்ன நிகழ்வுகளை அரங்கேற்றுவது.
ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸஃபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
இதுபோன்ற சமூக அவலங்களை முஸ்லிம்களை விட்டும் களைவதற்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் பற்பல மேடை சொற்பொழிவுகளையும் வாராந்தோறும் நடைபெறுகின்ற ஜும்ஆ பிரசங்கத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முஸ்லிம்களைவிட்டும் அகற்றிடப் பாடுபட்டால் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்.